About

இந்த நாவல் ஆசிரியர் ரகுநாதன் அவர்களின் கன்னி முயற்சி; முதல் நாவல். இளம் பெண் ஒருத்தியின் மென்மையான மனோ உணர்ச்சிகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் கவிநயத்தோடு சித்திரிக்கும் இந்த நாவல் முதன்முதலாக வெளிவந்தபோதே, தமிழுக்கு ஒரு நல்ல எழுத்தாளர் கிடைத்து விட்டார் என்பதை உணர்த்துவதாக அது அமைந்தது. அடுத்தடுத்துப் பல பதிப்புக்களைக் கண்டுள்ள இந்த நாவலை, எங்களது ரகுநாதன் நூல்கள் வரிசையில் மீண்டும் எங்களது பதிப்பாக வெளிக்கொணர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

சாளரத்தின் ஓரத்தில் கிடந்த பெட்டியின் மீது அமர்ந்தவாறே, வானைப் பார்த்திருந்தேன்.

வானில் வெள்ளிப் படகுபோல, வளர்பிறை மிதந்து சென்று கொண்டிருந்தது. படகைச் சுற்றி வைடூரிய மணிகளைப் போல மினுங்கிக் கொண்டிருந்தன தாரகைகள். பூஞ்சோலையில் பூத்த வர்ணப் பூக்களைப் பார்வையிட்டவாறே செல்லும் ஒரு அரசகுமாரியைப் போல, மெதுவாக நடை பழகிச் சென்றது நிலவு. குதூகலத்தில் என்னையுமறியாமல், துள்ளிக் கொண்டிருந்த என் மனத்திற்கு, அது அழகான இன்பக் கனவுகளையெல்லாம் பெருக்கிக் காட்டிக் கொண்டிருந்தது. அமைதியும் மகிழ்ச்சியும் மனத்தில் துளும்பிற்று. திடீரென ஒரு மேகம், கன்னங் கறுத்து, வெள்ளிப் படகை மூழகடிக்க வரும் பிரமாண்டமான அலை மாதிரி விரைந்து வந்தது.

Related Subjects

Artists