EBOOK

Thenalaigal

M. Karunanidhi
(0)

About

கதை, கட்டுரை, நாடகங்கள் தீட்டும்போது நான் கையாளும் தமிழ் நடையை முற்றிலும் மாற்றி ஒரு புதிய முறையைப் புகுத்த வேண்டுமெனக் கருதியதன் விளைவாக 'முத்தாரம்' திங்கள் இதழில் தொடர்ந்து பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை-இலக்கிய வளங்களை -இன்றைய விடுதலை வேட்கையை-புத்தம் புதிய நடையின் துணைகொண்டு மிக அழகாகச் சொல்ல முடியும் என்பதை உணர்ந்தேன்.

தமிழார்வம் படைத்த நண்பர்களும் - புலவர் பெரு மக்களும் என்னை ஊக்குவித்தனர்.

கவிதையுமல்லாமல் உரைநடையுமல்லாமல் 'கவிதை நடைச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் வெளிவந்த பன்னிரண்டு கதைகளை முத்துவேல் பதிப்பகத்தினர் "தேனலைகள்" என்ற நூல் வடிவில் உங்களிடம் தருகின்றனர்.
அடுத்த பதிப்பு இன்னும் அழகுடனும் சிறு சிறு பிழைகள்கூட இல்லாமலும் வெளிவரும் என்று நம்பி, அவர்கட்கு என் உளங் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தழைத்துக் குலுங்கும் தண் மலர்ப் பொழில். ஆங்கு மழைக் கூந்தற்காரி-பேரழகி யொருத்தி! அவள் இழைக்குப் பொன் வேய்ந்த துகில் பூண்டு நிற்கின்றாள், அணைக்கும் காதலனை அழைக்கும் கண் கொண்டு-கன்னங்களில் தேன் மொண்டு! கிள்ளை அவள் பெயர். பல், முல்லை ! இதழ், சர்க்கரை வில்லை !
அவனோ தமிழழகன். இளவணிகன். பருவ மயில் ஆடுதற்கு முகில் கூட்டும் கண்ணுடையான். வளரும் மலைத்தோளுடையான், வளவன் பெயரால்!
அவன், விற்காட்டும் புருவத்தாளை - தற்காத்துத் தற்கொண்டான் பேணுகின்ற கற்பு கருவத்தாளை-சந்திக்க வருகின்றான், பந்திக்கு முந்துகின்ற பசிகாரன் வேகத்தில்!
கனிமரங்கள் தலை நாணும்-அவள் எழில் வந்து தருவாய் நிற்கின்ற காட்சி கண்டு!

Related Subjects

Artists