EBOOK

About

'தென்னம்பாளை பிளந்து, சிந்திடும் சிரிப்புக்காரி' பத்மா புன்னகை பூத்தப்படி, சொன்னாள் 'அதெல்லாம் என்னிடம் நடக்காதடியம்மா! என் கிட்டே நடக்காது, தெரியுமா?' என்று.

'நீ என்ன பெரிய சிங்கியோ?' என்று குறும்பாகச் சொன்னாள் காந்திமதி.

'பத்மா, நீ ஸர்க்கஸ்வாலி என்று பெயர் வைத்துக் கொண்டு, சிங்கங்களை அடக்கும் பயிற்சியில் ஈடுபடலாம். ஜானகி வாத்தியாரம்மா. தேவகி டாக்டரம்மா. காந்திமதி. என்னவோ ஆகப் போகிறாளாமே!' என்று இழுத்து, பேச்சுக்கேற்ப நாட்டியமாடி நெளிந்து நின்றாள் பச்சை மயில் போன்ற புஷ்பா.

ஜானகி கலகலச் சிரிப்போடு கத்தினாள்: 'தெரியாதா? ஒரு சினிமாப் படத்திலே வந்துதே-'மயிலாப்பூர் வக்கீலாத்து மாட்டுப் பெண்ணாகணும்'னு. அது மாதிரி!......'

'போடி!' என்று பொய்க் கோபம் காட்டினாள் காந்திமதி.

'நம்ம கோஷ்டியிலே சினிமா ஸ்டார் ஆக வேணும்னு யாரும் ஆசைப்படலே போலிருக்கு. ஏண்டி புஷ்பா! அந்தக் குறையிருப்பானேன்? நீ வந்து'......

பத்மா பேசி முடிக்கவில்லை. அதற்குள் புஷ்பா கத்தினாள்: 'அது சரி பத்மு. உனக்கு ஏன் இந்தக் கோளாறான கருத்து? எல்லோரையும் போல........

'அதிலே என்ன சிறப்பு இருக்கு? ஆயிரத்தோடு ஆயிரத்தொண்ணு என்று எல்லாரும் வாழப் போய்க் தான் இந்த ஆண்கள் சூரப்புலிகள் மாதிரி ஜம்பம் பேசிக் கொண்டு திரிகிறார்கள். என்னை மாதிரிப் பலபேர் தேவை' என்று உறுதியாக மொழித்தாள் பத்மா.

'உன்னை மாதிரிப் பெண்களே நினைவில் நிறுத்தித் தான் நீட்ஷே சொல்லியிருப்பான் போலிருக்கு -பெண்களை அணுகும் போது கையிலே சவுக்கு, எடுத்துக்கொண்டு போ என்றானாம். பெண்களுக்கு, கசையடி தான் தேவையாம்.

இதைச் சொல்லி விட்டு கிண்கிணிச் சிரிப்பைக் காற்றில் கலக்க விட்டாள் புஷ்பா.

Related Subjects

Artists